அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர என்சிசி மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும், நாடு முழுவதும் கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்களை என்சிசியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் என்சிசி துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.ராகவ் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் உள்ள 28-வது பட்டாலியன் என்சிசி அலுவலகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்- நிக்கோபார் என்சிசி துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.ராகவ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, என்சிசி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். படிப்பு, என்சிசியில் ஆர்வம், பயிற்சி, முகாம்களில் பங்கேற்ற அனுபவம், பயிற்சியில் உள்ள நிறைகுறைகள் மற்றும் லட்சியம் குறித்தும் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து, பள்ளி, கல்லூரி என்சிசி பயிற்சியாளர்களிடமும், அலுவலக ஊழியர்களிடமும் கலந்துரையாடி அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ராகவ், ”என்சிசி மாணவர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நாட்டுக்காக தன்னலமற்ற சேவையாற்றவும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
ஒழுக்கம், ஒற்றுமை என்பது முக்கிய குறிக்கோள். அதோடு, ராணுவத்தில் சேருவதற்காக என்சிசி மாணவர்களை ஊக்குவித்து வருகிறோம்.
குறிப்பாக அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர ஊக்குவிப்பதோடு வழிகாட்டுகிறோம். தமிழகத்தில் அதிக அளவிலான இளைஞர்கள் ராணுவத்தில் ஆர்வத்துடன் சேருகின்றனர்.
என்சிசி மாணவர்களுக்கு கவாத்து மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.
ராணுவத்தில் மட்டுமின்றி வேறு எந்த பணியில் சேர்ந்தாலும் நாட்டு ஒற்றுமைக்காகவும், தேச நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
பள்ளி, கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்களை என்சிசியில் சேருவதற்கு ஊக்கமளித்து வருகிறோம். குறிப்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்களை அதிக அளவில் ஊக்குவிக்கிறோம். வரும் காலம் இவர்களுக்கு சிறப்பானதாக அமையும்.
தற்போது மழை, வெள்ளம் போன்றவை ஏற்படுகின்றன. இதுபோன்று பேரிடர் காலங்களில் ராணுவம், காவல்துறை மீட்புப்பணியில் ஈடுபடுவது போல், பாதிக்கப்பட்டவர்களை மீட்கப்பட்டு முகாம்களில் உள்ளோருக்கு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்ள என்சிசி மாணவர்களை ஈடுபடுத்துகிறோம்.
அதோடு, தேசிய பேரிடர் மீட்புக் குழு மூலம் என்சிசி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்களை என்சிசியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் 22,000 மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சோளம் கம்பு பூண்டு ரொட்டி
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்பாடுகள் : அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்.. பனையூரில் நிவாரணம் வழங்கிய விஜய்
மின்னம்பலம் செய்தியை எடுத்துச் சொன்ன அண்ணாமலை : தூர்வாராத சாத்தனூர் டேம்!
மின்னல்வேகம் உயிரை பறித்தது; எம்.பி.பி.எஸ் மாணவர்கள் 5 பேர் பலி!