பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. Pilgrimage for Thiruparankundram Hill
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் முதல் கந்தகோட்டம் வரை பாதயாத்திரை செல்ல அனுமதி வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக காவல்துறையில் மனு அளித்தும், அதற்கு அனுமதி வழங்கவில்லை.
திருப்பரங்குன்றம் மலை முருகப்பெருமானின் மலையாகும். அதை இஸ்லாமியர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். எனவே திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க யாத்திரை செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்று அனுமதி கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திருப்பரங்குன்றத்துக்காக சென்னையில் யாத்திரை செல்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இவ்வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றைய தினமே அரசு சார்பில் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாரத் இந்து முன்னணி அமைப்பு வடசென்னை மாவட்ட துணை தலைவர் யுவராஜ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
அப்போது அவர், “இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தை, ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த போராட்டக்காரர்கள் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் தவறாக பயன்படுத்த முடியாது.
காவல்துறை அனுமதிக்க கூடாது Pilgrimage for Thiruparankundram Hill

மதுரையில் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்திய போது மதகலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு பிரிவினருக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற மலையில் நடந்த சம்பவம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் முன் பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காணப்பட்டது. இது தொடர்பான தீர்மானத்தை மதுரை ஆட்சியரும் ஏற்றுக்கொண்டு உள்ளார்..
எனவே திருப்பரங்குன்றத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த எந்த அவசியமும் இல்லை. இதையும் மீறி போராட்டம் நடத்தினால் அது மற்ற மதத்தினரை தூண்டி பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும்.
எனவே பொது அமைதி, மதநல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது.
மதரீதியிலான பதட்டங்களை தணிக்கவும், பொது ஒழுங்கையும் மத நல்லிணக்கத்தையும் மீட்டெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை இந்து,முஸ்லீம், மற்றும் ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வருகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம். அதனால் அனைத்து மத மற்றும் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அரசு பேண வேண்டும்.
அமைதி, மற்றும் மத நல்லிணக்கம் பாதிக்கும் வகையில் எவரையும் செயல்பட அனுமதிக்க கூடாது.
இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்று கூறினார். Pilgrimage for Thiruparankundram Hill