கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த இரண்டு மாடி வீடு மற்றும் ஓட்டு வீடு இடிந்து விழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுவீடுகள் வழங்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சங்கனூர் கால்வாயை தூர்வாரும் பணிகளும், அதன் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணியும் மாநகராட்சி சார்பில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கால்வாயை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த சுரேஷ் என்பவரின் இரண்டு மாடி கொண்ட வீடு மற்றும் அதன் அருகே இருந்த ஓட்டு வீடு இரண்டும் நேற்று (ஜனவரி 20) இரவு தரைமட்டமாக இடிந்து விழுந்தன. அதன் அருகே இருந்த மேலும் சில வீடுகளும் சேதமடைந்தன. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
எனினும் ஒரே இரவில் வீடு, பாத்திரம் உள்ளிட்ட உடமைகளை இழந்து தற்போது தெருவில் நிற்பதாகவும், தங்களுக்கு அரசு சார்பில் அடுக்குமாடி வீடுகட்டி தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், இரு வாரங்களுக்கு முன்பே சங்கனூர் கால்வாயை ஒட்டி இருக்கும் வீடுகளில் இருப்பவர்களை காலி செய்ய அறிவுறுத்தினோம். தற்போது வீடுகளை இழந்த மூன்று குடும்பத்தினருக்கு மாற்று வீடுகள் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.