கோடையோ, குளிரோ… அனைத்து பருவ நிலைக்கும் ஏற்றது பப்பட். இந்த பனீர் பரா பப்பட் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது. எளிதில் செய்யக்கூடியது.
என்ன தேவை?
பாசிப்பருப்பில் செய்த பப்பட் – 4
பெரிய வெங்காயம் – ஒன்று
பனீர் – அரை கப்
பச்சை மிளகாய் – 2
குடமிளகாய் – ஒன்று
சாட் மசாலா – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், கொத்தமல்லித்தழை இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை ஒரு பவுலில் தனியே துருவி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் பாசிப்பருப்பு பப்பட்டை மிதமான சூட்டில் சூடு செய்யவும்.
கையில் ஒரு சுத்தமான திக்கான துணியை வைத்துக்கொண்டு, பப்பெட்டை முன்னும் பின்னும் அமுக்கி விட்டு திருப்பிப் போட்டு சூடாக்கவும். வெந்ததும் எடுத்து கைபொறுக்கும் அளவு சூட்டோடு இருக்கும்போதே, பப்பட்டை கோன் போல் ரோல் செய்து வைத்துக்கொள்ளவும். (கரண்டியால் பப்பட்டை திருப்பிப் போட்டால், அது எவ்வளவு சூடாக இருக்கிறது என்பது தெரியாது. ரொம்பவும் சூடானால் பப்பட் சுருட்ட வராது. இதற்காகத்தான் துணியைப் பயன்படுத்துகிறோம்).
ஒரு பவுலில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய், சாட் மசாலா, கொத்தமல்லித்தழை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, அதை பப்பட்டுக்குள் வைத்துப் பரிமாறவும். ஸ்கூல் முடித்து வரும் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஹாட் ரெசிப்பி இது. உங்களுக்கு நேரம் இருக்கும் போது பப்பட்டை ரோல் செய்து வைத்துக்கொண்டு, பரிமாறும் போது மட்டும் கலவை வைத்துக் கொடுக்கலாம்.