திருச்சியில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி உய்யக்கொண்டான் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் சுமார் 51 சென்ட் நிலத்தில் சுமார் 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது.
இந்த குடியிருப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. சுமார் 54 சதவீதம் விதிமுறைகளை மீறி உள்ளது.
இந்த முறைகேடு குறித்து திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
எனவே, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை இடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணபிரசாத் அமர்வு முன்பு விசாரணை செய்யப்பட்டு இன்று(ஜனவரி 11) தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், அனுமதி இல்லாமல் கட்டிய கட்டிடத்தின் பகுதிகளை எவ்வித தாமதமும் இன்றி இடிக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கட்டிடத்தின் உரிமையாளர் இந்த குடியிருப்பில் வீடுகளை வாங்கிய நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இதுபோல் செயல்பட்ட அதிகாரிகளை கட்டிட அனுமதி வழங்குவது குறித்த முக்கிய பதவியில் பணி மாற்றம் செய்யக்கூடாது.
அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அதனை 6 வாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருவாய்த்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் அரசு வழக்கறிஞரை அழைத்து நீதிமன்ற உத்தரவுகளை முறைப்படி ஆறு மாதத்தில் நிறைவேற்றி இருக்க வேண்டும். மீண்டும் இந்த வழக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தனர்.
கலை.ரா
அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பா, தீர்வா? தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!