கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இன்று (ஜூன் 22) வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் இன்று (ஜூன் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஜூன் 22) முதல் ஜூன் 28ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
2 மாவட்டங்களில் மிக கனமழை
தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (ஜூன் 22), நாளையும் (ஜூன் 23) கனமழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஜூன் 222) முதல் ஜூன் 25ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகள்
இன்று முதல் ஜூன் 25ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
இன்று தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்
இன்று (ஜூன் 22) முதல் ஜூன் 25ஆம் தேதி வரை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 – 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் : எச்.ராஜா கைது!