இனி இணையம் வழியாகவே பட்டா மாற்றிக் கொள்ளலாம்… எப்படி?

தமிழகம்

பட்டா மாறுதலுக்கு எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’

என்ற இணையவழி சேவையின் மூலமாகப் பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புற புல வரைபடங்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். இராமசந்திரன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த்,

இந்திய ஆட்சி பணி (இ.ஆ.ப) நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய், இ.ஆ.ப. மாநில தகவலியல் அலுவலர் கே. சீனிவாசராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டா மாறுதலுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதி

நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொதுச் சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து,

அவை இணையவழியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது, பொதுமக்களின் வசதிக்காக எங்கிருந்தும் எந்நேரத்திலும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் பொதுச்சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.

பொதுமக்கள் நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், இணை வழியாகக் கட்டணங்களைச் செலுத்திக் கொள்ளலாம்.

மேலும், பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’

என்ற இணையவழி சேவையின் மூலமாகக் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள், பொதுச்சேவை மையங்களுக்குச் செல்வதும், வட்டாட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்களால் அவதிப்படுவதும் தவிர்க்கப்படும்.

நகர்ப்புற வரைபடங்கள் இணைய வழியில் பதிவிறக்கம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற நில ஆவணங்கள் 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கணினிப்படுத்தப்பட்டு தமிழ்நிலம் என்னும் மென்பொருள் மூலம் படிப்படியாக இணையவழி பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி மூலமாக, பொதுமக்கள் நகர்ப்புற நிலவரைபடங்களை இணையவழியில் கட்டணமின்றி பெறலாம்.

மேலும், இவ்வரைபடம், மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குவதுடன், பொதுமக்கள், நகர நில வரைபடம் பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகம் சென்று நேரம் செலவிடுவதைத் தவிர்க்க முடியும்.

மோனிஷா

செப் -26 ல் அமைச்சரவைக் கூட்டம்!

ட்விட்டருக்கு படையெடுத்த இன்ஸ்டாகிராம் பயனர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0