சில நாட்களில் பள்ளியில் இருந்து பசியோடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்போம். அப்படிப்பட்ட நிலையில் சத்தான, மொறுமொறுப்பான இந்த ஓட்ஸ் ரிப்பன் பக்கோடா செய்து கொடுத்து அசத்தலாம்.
என்ன தேவை?
ஓட்ஸ், கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை கப்
வெண்ணெய், மிளகாய்த்தூள்,
எள் – தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஓட்ஸை வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், எள், பெருங்காயம், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிறகு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துப் பிசையவும். முறுக்கு பிழியும் அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டு மாவை நிரப்பவும்.
எண்ணெயைக் காயவிட்டு ரிப்பன்களாகப் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப் புகாத டப்பாவில் போட்டு 7 முதல் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.