குழந்தைகளுக்குப் பிரியாணி செய்து கொடுக்கும்போது அசைவ உணவுகளுக்கு பதிலாக சத்தான இந்த நட்ஸ் வெஜிடபுள் பிரியாணியும் செய்து கொடுக்கலாம். உணவில் காய்கறிகளை ஒதுக்கும் குழந்தைகள்கூட, பிரியாணியாகக் கொடுக்கும்போது காய்கறிகளை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஊட்டச்சத்துமிக்க இந்த காய்கறி பிரியாணி குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல சாய்ஸ்.
என்ன தேவை?
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் + பட்டாணி – ஒன்றரை கப்
பாதாம், முந்திரிப்பருப்பு (துண்டுகளாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
புதினா – கைப்பிடி
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய்ப்பால் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க…
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2
எப்படிச் செய்வது?
அரிசியைக் கழுவிக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயைச் சேர்த்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து, வதங்கியதும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, புதினா, கொத்தமல்லித்தழை, தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி, காய்கறி சேர்த்து வதக்கவும்.
தேங்காய்ப்பால் சேர்த்து அதனுடன் ஒன்றேகால் கப் தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். பிறகு, அரிசி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 3 நிமிடம் கழித்து அணைத்து விடவும்.
பிறகு பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிது வெண்ணெய் சேர்த்து பாதாம், முந்திரியைப் போட்டு வறுத்து குக்கரில் சேர்த்துக் கிளறி சூடான பிரியாணியைப் பரிமாறவும்.