திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையத்தின் பெயரை சகயோக் என தமிழ், இந்தி, ஆங்கிலம் என 3 மொழியிலும் ஒரே மாதிரி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ரயில்வே அதிகாரிகள் அதனை அகற்றினர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் என்றும் தமிழில் சேவை மையம் என்றும் ஹிந்தியில் சகயோக் என்றும் எழுதப்பட்டிருந்தது.
ஆனால் புதிதாக அச்சிடப்பட்ட பேப்பர் அறிவிப்பு பதாகை ஒன்று சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் ஹிந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது.
அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும் தமிழ் எழுத்திலும் சகயோக் எனவும் அச்சிடப்பட்டிருந்தது.
இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது.
ஹிந்தியில் சகயோக் என எழுதப்பட்டால் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும் தமிழில் சேவை மையம் என்றும் எழுதினால் தானே அனைத்து மொழியினருக்கும் புரியும்.
அதை விடுத்து அனைத்து மொழியினரும் சகயோக் என படித்தால் அதன் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்வது இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து சுதாரித்த ரயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை கிழித்து அகற்றினர்.
கலை.ரா