கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஓய்ந்ததாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையங்கள் கனமழை, காற்றழுத்த தாழ்வுப் பகுதி உள்ளிட்ட எச்சரிக்கைளை தொடர்ந்து அறிவித்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து வந்த வடகிழக்குப் பருவமழை விலகியதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 12) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று (ஜனவரி 12) ஓய்ந்தது.
இன்று மற்றும் நாளை (ஜனவரி 13) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மோனிஷா
சேது சமுத்திர திட்டம்: அதிமுக, காங்கிரஸ் காரசார வாக்குவாதம்!