கோவை ஈஷா பவுண்டேஷனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களை கட்டுவதற்காக எந்த ஒரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 24) தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், “மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
அந்த வனப்பகுதியில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கோவை ஈஷா யோகா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான விதிகளை மீறி கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டிட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் கடந்த 2012ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், “ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை உள்ள கட்டிட பணிகளுக்கு திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களும் தங்கள் அலுவலகத்திலோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை.
வழிபாட்டுத் தளத்திற்கான மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை. பட்டியலில் தரப்பட்டுள்ள நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆஜராகி, “ஈஷா பவுண்டேசனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேசன் நிர்வாகி பெறவில்லை. அனுமதி பெற்றதற்கான ஆவணங்களும் இல்லை” என்று அறிக்கை தாக்கல் செய்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் அதில் சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மோனிஷா
’வதந்திகளை நம்பாதீங்க’: விஜயகாந்தின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்!
“கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்” – கனகராஜின் அண்ணன் தனபால்