‘குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும்’ என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 29) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – தனது குழந்தையை பார்ப்பது குறித்த வழக்கு, கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த மனுமீதான விசாரணையின்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “விவாக ரத்தான பின்பு சில மனைவி குழந்தைகள் முன் தவறாக நடந்துகொள்வதாகவும், சண்டையிடுவதாகவும் அறிய முடிகிறது.
விவாகரத்தான மனைவி கணவனையோ, அல்லது கணவன் மனைவியையோ சம மரியாதையோடு, வெறுப்பை விழுங்கி அன்போடுதான் நடத்த வேண்டும் என நான் கூறமாட்டேன்.

ஆனால், மனித நேயத்துடன் நடத்தலாமே. எது மனிதநேயம்? தங்கள் குழந்தைகள் முன் ஒருவர்மீது ஒருவர் அன்பாக நடந்துக்கொள்ளவதுதானே? அல்லது குறைந்தபட்சம் ஒரு விருந்தினராக நடத்தலாமே?
ஏனெனில் நமது பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளில், ஒரு விருந்தினரை ‘அதிதி தேவோ பவ (விருந்தினர் கடவுள்)’ எனக் கருதுகிறோம்.
எனவே, குழந்தையைக் காண பிரிந்த கணவர் வரும்போதெல்லாம் விருந்தோம்பல் செய்து, சிற்றுண்டிகளை வழங்கி,
இரவு உணவை ஒன்றாகச் சேர்த்து சாப்பிட்டு குழந்தையை மகிழ்ச்சியாக உணரும்படி செய்யுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அந்தப் பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்,
நீதிபதிகள் பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 29) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “குருகிராமில் பணியாற்றும் தன்னால் சென்னைக்கு வர முடியாது.
இவ்வழக்கில் குழந்தையைக் காண வரும் முன்னாள் கணவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தனி நீதிபதி போதனை செய்ய முடியாது” என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,
”குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேனீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தனி நீதிபதி தனது அதிகாரவரம்பை மீறி பிறப்பித்துள்ளார்” எனத் தெரிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், குழந்தையை காண விரும்பினால் முன்னாள் கணவர் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, குருகிராம் சென்று சந்திக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெ.பிரகாஷ்