உக்ரைனில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 16பேர் பலியாகியுள்ள நிலையில், ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின.
அதேவேளையில் இந்தப் போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்யா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பி வருகிறது.
உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
சமீபமாக ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ் நகரின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.
நேற்று(ஜனவரி 18) உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றார்.
தலைநகர் கீவ் நகருக்கு 20கிலோமீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்தபோது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் இரண்டு பேர் என மொத்தம் 16பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
-ராஜ்