சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 8-ஆம் தேதி புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டது. மாண்டஸ் புயலால் தமிழகத்தில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.
இதனால் நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது. சென்னையில் 65 இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. புயலால் சாய்ந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செல்வம்
ஈசிஆரில் இரவு போக்குவரத்து நிறுத்தம்!
கரையை கடக்க தொடங்கியது மாண்டஸ் புயல்!