மன்னார்குடி அருகே தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் கிணற்றில் புதிய பணிகள் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பெரியகுடி என்ற கிராமத்தில் 2013ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் ஹைட்ரோ கார்பன் கிணறு தோண்டப்பட்டது. அப்போது அதிக அழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டு அந்தக் கிணறு தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அந்த கிணற்றை சரி செய்து பணிகள் தொடங்க அனுமதி அளிக்குமாறு ஓ.என்.ஜி.சி நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு இருக்கிறது. இதையறிந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படும் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 11) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் பெரியகுடி கிராமத்தில் புதிதாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பிறகே புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிணற்றை மூடலாம் என்று ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
சென்னை டூ குமரி வரை போதை ஒழிப்பு உறுதிமொழி: சில நிமிடங்களில் உலக சாதனை!