இந்தியாவில் ஏற்கனவே கொரோனா, குரங்கம்மை வைரஸ்கள் தாக்கம் இன்னும் முழுதாக விலகாத நிலையில், ‘டொமேடோ ஃப்ளூ’ எனப்படும் தக்காளிக் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் தக்காளிக் காய்ச்சல் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நேற்று (ஆகஸ்டு 20) லான்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவுகளில் மே 6 ஆம் தேதி கேரளாவில் முதன்முதலில் தக்காளிக் காய்ச்சல் வைரஸ் பதிவாகியதில் இருந்து இந்தியாவில் தக்காளி காய்ச்சல் 82 தொற்றுகள் பதிவாகியுள்ளன என குறிப்பிடுகிறது.
பெரும்பாலும் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ள பெரியவர்களைத்தான் இந்த தக்காளி வைரஸ் அதிகமாக தாக்குகிறது.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?
2022 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் தக்காளி காய்ச்சல் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
தக்காளி காய்ச்சல் வைரஸ் கோவிட் -19 இன் அறிகுறிகளைப் போன்ற அறிகுறிகளையே காட்டுகிறது, ஆனால் இந்த வைரஸ் SARS-CoV-2 உடன் தொடர்புடையது அல்ல.
குழந்தைகளுக்கு சிக்குன் குனியா அல்லது டெங்கு காய்ச்சலின் பின்விளைவாக தக்காளி காய்ச்சல் இருக்கலாம் என்கிறார்கள்.
உடல் முழுவதும் சிவப்பு மற்றும் வலிமிகுந்த சிறுசிறு கொப்புளங்கள் உண்டாகி பின் அவை வெடித்து படிப்படியாக தக்காளி அளவுக்கு பெரிதாகி வருவதன் அடிப்படையில் இந்த காய்ச்சலுக்கு தக்காளிக் காய்ச்சல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
தக்காளிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படும் முதன்மை அறிகுறிகள் சிக்குன்குனியாவைப் போலவே இருக்கும்.
இதில் அதிக காய்ச்சல், தோலில் தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஆகியவை இருக்கும். உடல் வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு போன்ற அதன் சில அறிகுறிகள்.
கோவிட்-19 நோயாளிகள் அனுபவிக்கும் அறிகுறிகள் தக்காளிக் காய்ச்சலுக்கும் பொருந்துகின்றன. மூட்டு வீக்கம், குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர்ப்போக்கு, மூட்டுவலி மற்றும் அதிக காய்ச்சல் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும்.
தக்காளி காய்ச்சலுக்கான சிகிச்சையானது சிக்குன்குனியா, டெங்கு சிகிச்சையைப் போன்றது. நோயாளிகள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும், அதிக தண்ணீர் குடிக்கவும் வேண்டும்.
தமிழ்நாட்டில் இல்லை: அமைச்சர் மா.சு.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்டு 21) வேலூரில் கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட வந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தக்காளிக் காய்ச்சல் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார்.
“தமிழ்நாட்டில் தக்காளிக் காய்ச்சல் இல்லை. கேரளாவில் ஒன்றிரெண்டு வந்தது. நாடு முழுவதும் என்ற வார்த்தையே தவறானது.
குரங்கம்மைதான் 70,80 நாடுகளில் இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
முகங்களிலும், முழங்கைக்குக் கீழேயும் கொப்புளங்கள் இருந்தால் அதை கண்டறிவதற்கான ஊழியர்களை இருக்கிறார்கள்.
இதுவரை அப்படிப்பட்ட பாதிப்புகள் இல்லை. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிற 13 வழிகளிலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறோம்” என்று பதிலளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
–வேந்தன்