வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகின்றன.
இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று (டிசம்பர் 16) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (16-12-2024) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை- 17-12-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18-12-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19-12-2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் அதிகபட்சமாக 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”ஆதவ் அர்ஜுனா விலக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” : திருமா