வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று (அக்டோபர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 20 அன்று உருவானது.
இது மேலும், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 23 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
பின்னர் வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும்.
பிறகு 25 ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்குத் தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ‘சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும் என்று ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
போக்குவரத்து ஓய்வூதியம்: அகவிலைப்படி உயர்வை வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை சி.பி.ஐ வங்கியில் தீ விபத்து!