நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளர் கோபி ரவிகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ல் ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3ம் தேதி விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் ரிட் மனு மீதான விசாரணையை 4 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நீட் தொடர்பான வழக்கை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருக்க விரும்பவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் சார்பாக எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா