நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகம், கர்நாடகம், சத்தீஷ்கர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் கிடைக்க வழிசெய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 14)டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும். மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு பின்னர் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
அதன்பிறகு மத்திய அரசு அரசாணை வெளியிடும். இதன்மூலம் விரைவில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரும் பழங்குடியினருக்கு உள்ள அனைத்து சலுகைகளை பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கலை.ரா