நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 7-ஆம் தேதி துவங்கி வைத்தார்.
அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2024-2025 -ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், மத்திய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக “நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை” துவங்கவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
‘நான் முதல்வன் SSC cum RAILWAYS மற்றும் BANKING பணிகளுக்கான கட்டணமில்லா ஆறு மாதக்கால உறைவிடப் பயிற்சிக்கான 1,000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14.07.2024 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC cum RAILWAYS தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும்.
இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விரிவான அறிவிக்கையைப் படித்துப் பார்த்து, 08.06.2024 அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2024 ஆகும்.
நுழைவுச் சீட்டு வெளியீடு 09.07.2024
தேர்வு நாள் 14.07.2024 (10.00 AM – 11.00 AM)” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…