‘சைவம் அல்லது அசைவம்…’ இது இரண்டில் எது உங்களுக்கு விருப்பமான உணவு என்று கேட்டால் உடனே நம்மில் பெரும்பாலானோர் ‘அசைவம்’ என்றுதான் தலையை வேகமாக ஆட்டுவோம்.
சிக்கன், மட்டன் என மாமிசங்களில் எதையும் விட்டுவைக்காமல் வெளுத்துக்கட்டும் அசைவ ஆர்வலர்களை மகிழ்விக்கும் இந்த மஷ்ரூம் மசாலா ஆம்லெட்.
என்ன தேவை?
காளான் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
முட்டை – 3
உருளைக்கிழங்கு,
தக்காளி – தலா ஒன்று
பூண்டு – 4 பல்
மிளகுத்தூள் – தேவையான அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காளானை கழுவி பொடியாக நறுக்கவும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி சதுர வடிவில் பொடியாக நறுக்கவும். பூண்டை தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து, நறுக்கிய காளானையும் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்புசேர்த்து காளானிலிருந்து தண்ணீர் பிரிந்து வரும்போது நறுக்கிய உருளைக்கிழங்கையும் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து, தண்ணீர் நன்கு சுண்டும்வரை வதக்கி இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து, அதில் முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கலக்கவும். இறக்கி வைத்துள்ள காளான் மசாலா கலவையை அதில் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கி எண்ணெய் விட்டு கலவையை ஆம்லெட்டாக வார்க்கவும். இருபுறமும் திருப்பி நன்கு வேகவிட்டு, மிளகுத்தூள் தூவி எடுக்கவும்.
குறிப்பு: ஒரு கப் காளான், வெங்காயம், முட்டை எல்லாம் சேர்ப்பதால் மேற்கூறிய அளவுக்கு 6ஆம்லெட் ஊற்றலாம். முட்டையை உடைத்து ஊற்றுவதற்கு முன் 2டீஸ்பூன் தண்ணீர் விட்டு உப்பு போட்டு பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கலக்கினால் ஆம்லெட் மிருதுவாக வரும்.