முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் உயிரை விடவும் தயங்க மாட்டோம் என்றும் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லோயர் கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புக்கும், கண்காணிப்புக்கும் உச்ச நீதிமன்றம் மத்திய கண்காணிப்புக் குழுவை நியமித்து இருந்தது. இந்த நிலையில், இக்குழு கலைக்கப்பட்டு கடந்த நவம்பரில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையம் ஏழு பேர் கொண்ட புதிய மேற்பார்வைக் குழுவை நியமித்தது.
இதில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் இரு மாநிலத்தைச் சேர்ந்த தலா இரண்டு அதிகாரிகள், இரண்டு தொழில்நுட்ப விஞ்ஞானிகள் என்று மொத்தம் ஏழு பேர் உள்ளனர்.
இதில் கேரள தரப்பில் உள்ள அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழக விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், முல்லை பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசியல்வாதிகள், தனியார் அமைப்புகள் தொடர்ந்து விஷம பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முல்லை பெரியாறு அணை வலுவாக உள்ளதாக பல்வேறு நிபுணர் குழுக்களாலும், உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்ட பிறகும் அணை பலவீனமாக உள்ளதாகவும், அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ளது பழைமையான பஞ்சாயத்து வெள்ளியமட்டம். இந்தப் பஞ்சாயத்தில் கடந்த வாரம் முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு அதற்கு மாற்றாகப் புதிய அணை கட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தை பஞ்சாயத்து தலைவரான இந்து பிஜு முன்மொழிந்திருக்கிறார். சுயேச்சைகள் ஆதிக்கம் செலுத்தும் 15 வார்டுகளைக் கொண்ட வெள்ளியமட்டம் பஞ்சாயத்தில், ஏக மனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, தமிழக கேரள எல்லையான லோயர் கேம்ப்பில் நேற்று (ஜனவரி 25) பல்வேறு விவசாய அமைப்புகளின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கேரளாவை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்பு அப்பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பேசியபோது, “40 ஆண்டுகளாக கேரள அரசு பெரியாறு அணைக்கு எதிரான விஷயங்களை பரப்பி வருகிறது. தொடர்ந்து காந்திய வழியிலே போராடி வருகிறோம். எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.
அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறுவோம். பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு இருந்து தான் கேரளாவுக்கு செல்கிறது. 2011-ம் ஆண்டு போல ஒரு போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். ஆகவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அணைக்கென தனிக்குழு அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக எதிரெதிர் கட்சிகளும், அமைப்புகளும் களத்தில் ஒன்று சேர்ந்து போராடுகின்றன. ஆனால் இங்கு அதுபோன்ற நிலை இல்லை. ஆகவே ஆளும்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராட்ட களத்துக்கு வர வேண்டும்.
தொடர்ந்து அணைக்கு எதிராக செயல்பட்டால் இனி கேரளாவுக்குள் சென்று போராட்டம் நடத்துவோம். அணை கட்டுமானப்பணியிலே ஏராளமானோர் உயிரிழந்தனர். அதுபோல தற்போது அணையைக் காக்கவும் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடத் தயங்க மாட்டோம்” என்றனர்.