தற்போதைய சூழ்நிலையில் நாவுக்கு இதமாக பீட்சா, பாஸ்தா போன்ற உணவுகள் சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் அதை தவிர்த்து மழை மற்றும் குளிர்காலத்தில் பச்சை காய்கறி, கீரை வகைகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு இந்த முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம் உதவும்.
என்ன தேவை?
இட்லி மாவு – 4 கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
கேரட் – ஒன்று
முடக்கத்தான் கீரை – ஒரு கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப் பருப்பு – தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, இட்லி மாவில் சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும்.
பிறகு, நன்கு கலக்கி குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி குழிகளில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.