தென்னிந்தியர்களின் பேவரைட் டிஷ் மோர் மிளகாய். காய்ந்த மோர் மிளகாய்களை பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.
தேவைப்படும்போது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து எண்ணெயில் பொரித்து உபயோகிக்கலாம். இட்லியை உதிர்த்து தாளிக்கும்போது பச்சை மிளகாய்க்கு பதில் இந்த மோர் மிளகாயை உபயோகித்தால், இட்லி உப்புமா நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும். மசாலாப் பொரி செய்யும்போது தாளிக்கும் பொருட்களுடன் மோர் மிளகாயையும் கிள்ளி தாளித்தால், பொரி நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும்.
என்ன தேவை?
நீளமான பச்சை மிளகாய் – 150 கிராம்
தயிர் – 200 மில்லி
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
அரைக்க:
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உளுந்து – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெந்தயம், உளுந்தை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். மிளகாயைக் கழுவி காம்பு சிறிதளவு இருக்குமாறு பார்த்து நறுக்கிக் கொள்ளவும். கத்தியால் சிறிதளவு கீறிவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, அரைத்த உளுந்து விழுது சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். உளுந்து, வெந்தயம் சேர்ப்பதால், தயிர் மிளகாயுடன் நன்றாக ஒட்டிக்கொள்ளும். பின்னர் மிளகாயைச் சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு நாள் வரை ஊற விடவும்.
மறுநாள் தயிரிலிருந்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். மாலையில் திரும்பவும் இதே தயிரில் ஊற வைக்கவும். இவ்வாறு தயிர் வற்றும் வரை ஊறவைத்து மீண்டும் காயப்போடவும்.
பிறகு இரண்டு நாள் வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி, அடுப்பைக் குறைத்து வைத்து, மோர் மிளகாய் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதை தயிர் சாதத்துடன் பரிமாறவும்.