பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னையில் நாளை(ஏப்ரல் 8) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி 8.04.2023 அன்று சென்னைக்கு வருகை தந்து புதிய விமான நிலைய முனையம் திறந்து வைக்கவும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கவும் மற்றும் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.
திருவல்லிக்கேணி
பிரதமர் மோடி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் ஹவுஸ், ரத்னா ஹபே,திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்.
மெரினா
போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணா சாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, சந்திப்பில் திருப்பிவிடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்றுப்பாதையானது மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுத்தப்படும்.
சென்னைக்குள் நுழையும் அல்லது சென்னையைவிட்டு வெளியே செல்லும் வாகனங்களுக்கான அறிவிப்பு
பல்லாவரம்
பல்லாவரத்திலிருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்படுகிறது. GST சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருநீர்மலை மேம்பாலம் வழியாக 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாகவோ அல்லது துரைபாக்கம் மார்க்கமாகவோ சென்னைக்குள் செல்லலாம்.
தாம்பரம்
GST சாலை பெருங்களத்தூரிலிருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலது புறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்குள் செல்லலாம்.
GST சாலை செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்தும் கனரக வாகனங்களும் வண்டலூர் வெளிவட்ட சாலை(ORR) வழியாக சென்னைக்கு செல்லலாமம். கிஷ்கிந்தா சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வெளிவட்ட சாலை(ORR) வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம்.
வணிக வாகனங்கள்
வணிக வாகனங்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 8 மணி வரை இடையிடையே திசை மாற்றம் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்படும்.
அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி அண்ணா நகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் NRD புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று மின்ட் சந்திப்பு மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.
ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர் ரோடு, ஈவிகே சம்பந்த் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பிவிடப்படும்.
லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயிண்ட் நோக்கி திருப்பிவிடப்படும்.
கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தைவெளி நோக்கி திருப்பிவிடப்படும்.
அதிக பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனை மேற்கொள்ளப்படும்.
எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரிகளுக்குள் ஃபைட்: பின்னணி என்ன?
பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
