தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக தரப்பில் இன்று (ஏப்ரல் 3) தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 4 நாட்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் 9ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி, மாலை 4 மணியளவில் வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.
ஏப்ரல் 10ஆம் தேதி நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, நீலகிரியில் வாகன பேரணியில் ஈடுபடவுள்ளார்.
தொடர்ந்து, கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
அதன் பின்னர் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 11 மணியளவில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இதனையடுத்து, ஏப்ரல் 14ஆம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : எஸ்.எஸ்.சி அறிவிப்பு!
வெள்ள நிவாரணம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு!