திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்துவரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோயில், சிவராஜ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த பகுதியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மூன்று தலைமுறைகளாக இந்த பகுதியில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குடியிருப்புகளை அகற்ற மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது.
தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்காக மீண்டும் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் கோபமடைந்த மக்கள் நேற்று இரவு , திருப்பத்தூரில் உள்ள திமுக எம்எல்ஏ நல்லதம்பி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது எம்எல்ஏ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் நோட்டீஸ் அனுப்பியபடி இன்று (டிசம்பர் 20) காலை ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களுடன் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட மக்கள் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் குவிந்து அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாற்று இடம் ஏற்பாடு செய்யும் வரை குடியிருப்புகளை அகற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் திருப்பத்தூர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரியா
சினிமாவில் வசனகர்த்தாவுக்கான இடம்: ‘விஜயானந்த்’ மதுரகவி பேட்டி!