தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்பது அனைவருக்குமான வளர்ச்சியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் வீடு, மனை விற்பனை கண்காட்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18) கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மாபெரும் வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருகிறது.
நாகரிக மனிதர்களின் அடையாளங்களில் முக்கியமானதாக விளங்கும் வீட்டு வசதியினை தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உருவாக்கி தரக்கூடிய முயற்சியில் இந்த அரசு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாகும். தமிழ்நாட்டில் 1991-ஆம் ஆண்டு 1 கோடியே 90 லட்சமாக இருந்த நகர மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டு 3 கோடியே 49 லட்சமாக அதிகரித்து 2031-ஆம் ஆண்டு 5 கோடியே 34 லட்சம் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பார்த்தால் தமிழ்நாட்டில் 832 நகரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 49 விழுக்காடு மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நகரமயமாதலில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஆகியவற்றின் மூலமாக திட்டங்களை தீட்டி கொள்கைகளை வகுத்து நகர்ப்புற வளர்ச்சி பணிகள் மற்றும் வீட்டு வசதி தேவைகளை பல்லாண்டுகளாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.” என்று தெரிவித்தார்.
செல்வம்
அன்புஜோதி ஆசிரம வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!