திருப்பூர், கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், மஜரா சிட்கோ, டி.நகர் என்ற முகவரியைச் சேர்ந்த இனியவன், த/பெ.பாலசுந்தரம் (வயது 12) மற்றும் சந்துரு, துபெ.பாண்டியராஜன் (வயது 12) ஆகிய இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் உள்வட்டம்,
பட்ரஅள்ளி தரப்பு, முத்துநகர் என்ற முகவரியைச் சேர்ந்த திரு.முருகன், திருமதி.பார்வதி
தம்பதியினரின் குழந்தைகள் செல்வி. புவனா (வயது 11) மற்றும் செல்வன். வினோத் (வயது 7) ஆகியோர் நேற்று பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு, எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த
இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மதுரையில் மாநாடு: அதிமுக செயற்குழு கூட்ட முழுத் தீர்மான பட்டியல்!