கள்ளக்குறிச்சி கலவரம்: மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடுகள் தீவிரம்!

Published On:

| By srinivasan

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளியின் முதல்வர், ஆசிரியர் ஆகியோர் கைது செய்யபட்டனர். ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று ஜூலை 17ஆம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி வாகனம் மற்றும் ஆவணங்கள், உடைமைகளை தீ வைத்துக் கொளுத்தினர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபுக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி பொறுப்பு மாவட்ட அமைச்சரும், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் வன்முறை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ( ஜூலை 18 ) முழுவதுமாக ஆய்வு சென்றனர்.

இரண்டாவது நாளாக இன்று ( ஜூலை 19 ) சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பள்ளி மாணவர்களின் ஆவணங்கள் அனைத்தும் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. நீதிமன்றம் சொன்னது போல இந்த கலவரம் திட்டமிட்டே உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதிலாக மாணவர்களுக்கு புதிய சான்றிதழ் வழங்க வருவாய்த் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உடனடியாக சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

மாணவர்களின் எதிர்காலம் பற்றி முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

சீனிவாசன்