சென்னையில் மாநகரப் பேருந்துகளுடன் இயங்கும் மினி பேருந்துகளின் கட்டணம் மே 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. 4 கி.மீ முதல் 20 கி.மீ வரை உள்ள தூரங்களுக்கு ஏற்ப கட்டணம் ரூ.4 முதல் ரூ.10 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Mini Bus Fare Hike in Chennai
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கீழ் சுமார் 3,400 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பெரிய அளவிலான பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ரயில் நிலையங்களை பேருந்து நிலையங்களோடு இணைக்கும் வகையில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மினி பேருந்துகளின் கட்டணம் மே 1 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் 2 கிலோமீட்டருக்கும், 2 கிலோமீட்டர் முதல் 4 கிலோமீட்டர் வரை பயணத்திற்கும் ரூ. 4 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலையான 6 கிலோமீட்டர் வரை பயணத்திற்கு ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதைத் தொடர்ந்து, நான்காம் நிலை பயணமான 8 கிலோமீட்டருக்கு ரூ. 6 கட்டணம் நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் நிலை பயணமான 10 கிலோமீட்டர் வரை ரூ. 7 மற்றும் ஆறாம் நிலை பயணமான 12 கிலோமீட்டர் வரை ரூ. 8 வசூலிக்கப்பட உள்ளது.
இது தவிர, ஏழாம் நிலையான 14 கிலோ மீட்டர் முதல் ஒன்பதாம் நிலையான 18 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ.9 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, பத்தாம் நிலையான 20 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் தனியார் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் பயணியர் மற்றும் மினி பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து சென்னையின் புறநகர் பகுதிகளாக உள்ள திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் முதல் முறையாக தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் அதற்கு பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.