புரதம், கொழுப்பு, மாவுச்சத்து மூன்றும் சேர்ந்த சமச்சீர் உணவு பொங்கல். இதில் சேர்க்கப்படும் வெல்லம் நாவின் உமிழ்நீர் சுரப்பியிலிருந்து வயிற்றுக்குள் இருக்கிற செரிமான என்சைம் வரை அனைத்தையும் தூண்டிவிடும். இந்த குதிரைவாலி அரிசி பொங்கல் உடலுக்கு மேலும் வளம் சேர்க்க உதவும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தரும்.
என்ன தேவை?
குதிரைவாலி அரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் – அரை கப் (தலை தட்டியது)
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் – 1
கிராம்பு – 1
முந்திரி – 6
எப்படிச் செய்வது?
அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துகொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடுச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும். அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும்.
ஒருவேளை வெல்லத்தில் கற்கள் இருப்பதாக தோன்றினால் கரையவிட்டு வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கலாம். நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.