மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு இன்னும் வந்து சேரவில்லை என பொதுப்பணித் துறை அதிகாரியிடம் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் புகார் அளித்தனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாகண்ணு, மாநிலத் துணைத்தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் திருச்சி பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரத் துறை) ராமமூர்த்தியிடம் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 48 நாட்கள் ஆகிறது. ஆனால், முசிறி தாலுகாவில் மேட்டு வாய்க்கால், பள்ள வாய்க்கால், கட்டளை வாய்க்கால், வடகரை வாய்க்கால், காட்டு வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கு இதுவரை தண்ணீர் சென்றடையவில்லை. குறுவை சாகுபடி தொடங்கிய நிலையில் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.
அதேபோன்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள மருதாண்டாகுறிச்சி வாய்க்காலுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் செல்ல மேட்டூர் அணையில் இருந்து 25,000 கன அடி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.37 அடி உயர்ந்து 105.81 அடியை தாண்டியுள்ளது. நீர் இருப்பு 75.57 டிஎம்சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 98.208 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் மேலும் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று தெரிகிறது.
-ராஜ்