கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அறிவித்ததை போன்று தமிழகத்திலும் அறிவிக்க வேண்டும் என்று கமல் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியிலான அவஸ்தை காரணமாகப் பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். இதனைக் கருத்தில் கொண்டு ஒரு சில நிறுவனங்கள் மாதவிடாய் நாட்களில் மட்டும் விடுமுறையோ அல்லது வீட்டிலிருந்தவாறு பணியாற்றவோ சலுகை வழங்குகிறது.
ஆனால் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற சலுகைகள் இல்லை. இந்நிலையில், கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறை அளித்து அம்மாநில அரசு கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் 75 சதவீதம் வருகைப் பதிவு வைத்திருக்க வேண்டும் என்றால், மாணவிகளுக்கு 73 சதவீதம் இருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டது. 60 நாட்கள் மகப்பேறு விடுமுறையும் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் மூகாம்பிகா இரத்தினம் இன்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக இதைச் செயல்படுத்தியுள்ள கேரள அரசை மநீம பாராட்டுகிறது.
கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குக் கேரள அரசு விரிவுபடுத்தியுள்ளது.
பெண்கள், சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.
மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசும், கல்வித் துறையும் முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
–பிரியா
“ஓபிஎஸ் இபிஎஸ் சந்திக்க வாய்ப்பே இல்லை”: ஜெயக்குமார்
செவிலியர்களிடம் மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா
விஜய்யின் வாரிசு: தமிழ்நாட்டு வசூல் எவ்வளவு?