‘மெனோபாஸ் பாலிஸி’ உருவாக்குவதற்கு முன் நிபுணர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு தனியார் துறையிலும் அரசாங்கத்திலும் பணிபுரியும் பெண்களுக்காக ‘ மெனோபாஸ் பாலிஸி’ ஒன்றை உருவாக்குமா? என இன்று(டிசம்பர் 9) நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மக்களவையில் விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஒன்றிய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்தார்.
அவர் பேசுகையில், “மாதவிடாய் நிறுத்தம் என்பது பொதுவாக 45முதல் 55வயதிற்குள் நடக்கும். பெண்களின் வயதான செயல்முறையின் இயல்பான விளைவாகும்.
எந்த அடிப்படை காரணமும் இல்லாமல் ஒரு வருடத்திற்கு மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நின்றதாகக் கருதப்படுகிறது.
சில பெண்களுக்கு லேசான பிரச்சனைகள் ஏற்படும் சிலருக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. சில பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் கடுமையான அறிகுறிகள் இருக்கும். மாதவிடாய் நின்ற பின்பு மேலும் பல ஆண்டுகளை கழிக்க வேண்டியிருப்பதால் பெண்களின் வாழ்வில் இது தவிர்க்க முடியாத நிகழ்வு.
தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ‘மெனோபாஸ் பாலிஸி’ ஏதும் நடைமுறையில் இல்லை.
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸ் கொள்கையை உருவாக்குவது தொடர்பான முடிவு எடுப்பதற்கு முன்பாக, அது தொடர்பானவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து,
உடல் மற்றும் மன அழுத்தம் தொடர்பான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் ; மெனோபாஸ் காரணமாக பெண் ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சனைகள் என இந்த விஷயத்தின் அனைத்து அம்சங்களையும் கவனமாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மேலும், மாதவிடாய் மற்றும் கல்வி பிரச்சாரம் போன்ற பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு இந்திய அரசின் பல திட்டங்கள் மூலமாகவும், விளம்பரங்கள்/வீதி நாடகம் போன்றவற்றின் மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறினார்.
மலக்குழி மரணம் : விட்னஸ் படம் எப்படி?
காலிறுதி சுற்று: அர்ஜென்டினா vs நெதர்லாந்து..வெற்றி யாருக்கு?