அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (22.5.2022) முடிவடைகிறது.
2023-24ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.
மே 19ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கக் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், மே 22 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இளநிலை படிப்புகளில் சேருவதற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று (மே 22) கடைசி நாளாகும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு முடிந்ததும், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிக்கு வருகிற 23ஆம் தேதி அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து வருகிற 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.
பின்னர் வருகிற 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9ஆம் தேதி வரை முதல் கட்ட பொது கலந்தாய்வும், அடுத்த மாதம் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வும் நடத்தப்பட இருக்கிறது.
கலந்தாய்வு நிறைவு பெற்றதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே தெரிவித்து இருந்தது நினைவுகூரத்தக்கது.