கிச்சன் கீர்த்தனா: மணத்தக்காளிக்கீரைத் துவையல்

Published On:

| By Minnambalam

வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

அந்த விதத்தில் இந்தத் துவையலைக் கெட்டியாக அரைத்தால் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தண்ணீர்விட்டுக் கரைத்தால் இட்லி, தோசைக்கு சட்னி போல மேட்ச் ஆகும்.

வெளிர் நிற கீரைகளாகப் பார்த்து வாங்கினால் கசப்பு இருக்காது. கரும்பச்சை நிற கீரைகள் சற்று கசப்பைத் தரும். ஆனால் கெடுதல் இல்லை.

என்ன தேவை?

மணத்தக்காளிக்கீரை – ஒரு கப்
குடமிளகாய் – ஒன்று (சிறியது)
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மணத்தக்காளிக்கீரையை ஆய்ந்து தண்ணீரில் கழுவி எடுத்து வைக்கவும். குடமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் உளுத்தம்பருப்பு சேர்த்து லேசாகச் சிவந்ததும் காய்ந்த மிளகாய் சேர்த்து, பிறகு கீரை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின்னர் குடமிளகாய், புளி, உப்பு சேர்த்து அடுப்பைக் குறைத்து 3 நிமிடம் வதக்கி, இறுதியாக தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் அதை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

குறிப்பு: புளிப்பு, காரத்தை உங்கள் விருப்பத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.

பருப்பு, கிழங்கு உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்துவது உண்மையா?

மணத்தக்காளிக்கீரை சூப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share