மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் எழுந்தருளி உலா வந்தனர்.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா கோயிலில் உள்ள அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் வெகுவிமர்சையாக நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, ராயர் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ராயர் கிரீடம் அம்மனுக்கு சாற்றப்பட்டு, திருமலைநாயக்கர் வழங்கிய செங்கோல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சியம்மனுக்கு தீபாரதனை காட்டப்பட்டது.
மீனாட்சியம்மன் பட்டாபிஷேகத்தை தொடர்ந்து அம்மனின் பிரதிநிதியாக இருந்து அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்ற அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் மீனாட்சிஅம்மன் கோவில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார். முன்னதாக கோவில் கணக்குப்பிள்ளையிடம் தங்க எழுதுகோல் வழங்கப்பட்டது
பட்டாபிஷேகம் நடைபெற்ற நாள் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்கள் மதுரையில் அன்னை மீனாட்சியின் ஆட்சி நடைபெறும் என்பது ஐதீகம்.
விழாவின் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக் விஜயம் இன்றும், விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 21 ஆம்தேதியும், 22 ஆம் தேதி சித்திரை வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
ராமலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…