சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான அனுமதி சான்றிதழை பெற இரவு 8 மணி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 31) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்கிடையே, தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பார்முலா 4 கார் ரேஸுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு (எப்.ஐ.ஏ) சான்றிதழ் பெற வேண்டியது அவசியம் என உத்தரவிட்டு, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு போட்டிக்கு அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னையில் பெய்த மழையின் காரணமாக, எப்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்ய காலதாமதமானது. எனவே சான்றிதழ் அளிப்பதற்கான காலக்கெடுவை இரவு 9 மணி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் அவசர முறையீடு செய்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுரேஷ் குமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில், எப்.ஐ.ஏ சான்றிதழ் பெற இரவு 9 மணி வரை அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், சான்றிதழ் மறுக்கப்பட்டால், கார் பந்தயம் தள்ளிவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கான சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு (எப்.ஐ.ஏ) சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாழை படத்தின் தாக்கம் இதுதான்… மாரி செல்வராஜ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது என்ன?