கிச்சன் கீர்த்தனா: தினை கிச்சடி

Published On:

| By Minnambalam Desk

உப்புமாவை விரும்பாதவர்கள்கூட கிச்சடி என்றால் ஒதுக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தினை கிச்சடி செய்து கொடுங்கள். இன்னும் கொஞ்சம் கொடுங்கள் என்று விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். 

என்ன தேவை?

தினை – முக்கால் கப்
பாசிப்பயறு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – 2
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கேரட் – அரை கப்
பீன்ஸ் – 3
பூண்டு – 3 பல்
பெங்களூர் தக்காளி – அரை
பச்சைப்பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – ஒன்றரை கப்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
சீரகம் – அரை டீஸ்பூன்
பட்டை – 2

எப்படிச் செய்வது?

தினை மற்றும் பாசிப்பயறை இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும். கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம் இஞ்சி, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். ஊற வைத்த பாசிப்பயறு மற்றும் தினையை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வதக்கிய கலவையுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான சூட்டில் வேக வைக்கவும். இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். குக்கரின் பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து கிச்சடியில் நெய் ஊற்றிக் கலக்கி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: கிச்சடியை குக்கரில் செய்வதால், சீக்கிரம் செய்து விடலாம். ஆனால் தண்ணீர் அதிகம் சேர்க்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel