அணுமின் நிலையம் வளாகத்துக்குள்ளேயே அணு எரிபொருளைப் புதைத்து வைக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதையும் மீறி ஒன்றிய அரசு அதைச் செய்துள்ளது என்று விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்.பி டி.ரவிக்குமார் மக்களவையில்,
‘செலவழிக்கப்பட்ட அணு எரிபொருளை (எஸ். என். எஃப்) சேமிப்பதற்கு ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?,
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்குள் எஸ். என். எஃப் அணு உலைக்கு அப்பால் நிரந்தரமாக சேமித்து வைக்கும் முடிவைப் பற்றி ஒன்றிய அரசு தமிழ்நாடு மாநில அரசிடம் கலந்தாலோசித்ததா? அப்படியானால்,
அதன் விவரங்கள் மற்றும் இல்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன?’ எனக் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு, பிரதமர் அலுவல் துறையின் மத்திய இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர பிரசாத் பதிலளித்தபோது.
“2021-22 ஆம் ஆண்டில், கூடங்குளம் அணுமின் நிலையம் 1 மற்றும் 2 (2X1000 MW) 14,536 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்தது,
இது மொத்த மின்சார உற்பத்தியில் ஒரு சதவிகிதம் ஆகும்.
எஸ். என். எஃப் சேமிப்பதற்கான முதல் இடம் அணு உலை செலவழிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு கட்டடத்தில் அமைந்துள்ளது,
இது பொதுவாக செலவழிக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு குளம் அல்லது விரிகுடா என அழைக்கப்படுகிறது.

மேற்கூறியவற்றைத் தவிர, அணு உலைக்கு அப்பால், செலவழிக்கப்பட்ட எரிபொருளைச் சேமித்து வைக்க, ஆலை வளாகத்திற்குள், அவே ஃப்ரம் ரியாக்டர் (ஏ. எஃப். ஆர்) வசதி எனப்படும் மற்றொரு சேமிப்பு வசதி உள்ளது.
இந்தியா ஒரு மூடிய எரிபொருள் சுழற்சிக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளது, இதன் கீழ், திட்டத்தின் அடுத்த கட்டத்துக்கான எரிபொருளைப் பெற எஸ். என். எஃப் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, எஸ். என். எஃப் என்பது அது மறுபயன்பாட்டுக்கு அனுப்பப்படும் வரை ஆலை வளாகத்திற்குள் இருக்கும் ஏஎஃப்ஆர் வசதியில் தற்காலிகமாக மட்டுமே சேமித்து வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஏ. எஃப். ஆர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிராவில் தாராபூர், ராஜஸ்தானில் ராவத்பட்டா ஆகிய இடங்களிலும் கட்டப்பட்டுச் செயல்படுகின்றன” என்று அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் எழுத்து மூலமான பதில் குறித்து திமுக எம்பி ரவிக்குமார் கூறும்போது,
“ஏ. எஃப். ஆர் வசதியை ஏற்படுத்துவதற்குத் தமிழ்நாடு அரசிடம் கலந்தாலோசிக்க படவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
அதுமட்டுமின்றி அந்த வளாகத்துக்குள்ளேயே எரிபொருளைப் புதைத்து வைக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதையும் மீறி ஒன்றிய அரசு அதைச் செய்துள்ளது” என்று கூறினார்.
சூர்யா கால்ஷீட் மறுப்பு: இயக்குநருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன்