தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து வரும் நிலையில் காய்கறி விலை சரிந்துள்ளது.
சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பூக்கள் வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்து வருகிறது.
நேற்று ஒரு கிலோ மல்லி 800 ரூபாய்க்கும் முல்லை 450 ரூபாய்க்கும் ஜாதிமல்லி 300 ரூபாய்க்கும் கனகாபுரம் 600 ரூபாய்க்கும் சாமந்தி 100 ரூபாய்க்கும் சம்பங்கி 120 ரூபாய்க்கும் சாக்லேட் ரோஸ் 140 ரூபாய்க்கும் பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும் மஞ்சள் ரோஸ் 160 ரூபாய்க்கும் சிவப்பரளி 200 ரூபாய்க்கும் வெள்ளை அரளி 230 ரூபாய்க்கும் தவனம் 150 ரூபாய்க்கும் மருகு 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதே நேரம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் அனைத்து காய்கறிகளின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ நாட்டு தக்காளி 25 ரூபாய்க்கும் நவீன தக்காளி 30 ரூபாய்க்கும் கேரட் 60 ரூபாய்க்கும் பீன்ஸ் 40 ரூபாய்க்கும் பீட்ரூட் 45 ரூபாய்க்கும் முள்ளங்கி 20 ரூபாய்க்கும் முட்டைகோஸ் 25 ரூபாய்க்கும் வெண்டைக்காய் 20 ரூபாய்க்கும் உஜாலா கத்திரிக்காய் 18 ரூபாய்க்கும் பாகற்காய் 30 ரூபாய்க்கும் புடலங்காய் 20 ரூபாய்க்கும் சுரைக்காய் 25 ரூபாய்க்கும் வெள்ளரிக்காய் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார்,
“கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருவதால் காய்கறிகள் விளைச்சல் அமோகமாக உள்ளது.
அனைத்து காய்கறிகளும் தட்டுப்பாடு இல்லாமல் மார்க்கெட்டில் வந்து இறங்கியுள்ளது. எனவே அனைத்து காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளது.
கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலைகள் உயர்ந்தது. ஆனால் இந்த தீபாவளியை முன்னிட்டு அனைத்து காய்கறிகளின் விலைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
-ராஜ்
காமராஜரை பற்றி அவதூறு: ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க அனைத்து நாடார் சங்கம் வலியுறுத்தல்!
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை எடப்பாடி மவுனத்துக்குக் காரணம் இதுதான்!