கிச்சன் கீர்த்தனா: கிரில்ட் மீன்

Published On:

| By Selvam

அசைவ பிரியர்களுக்கு மட்டன், சிக்கனைவிட மீன் நல்லது என்று பரிந்துரைப்பதற்கு காரணம் மீனில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற அமிலம். ஆனால் பலர் மீனைப் பொரித்து சாப்பிடவே விரும்புவார்கள். மீனை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதால் தேவையில்லாத கொழுப்பு சத்துகள் சேர வாய்ப்பிருக்கிறது.

எனவே மீனைப் பொரித்து சாப்பிடுவதைச் சுட்டு சாப்பிடலாம். அதற்கு இந்த கிரில்ட் மீன் ரெசிப்பி உதவும். வாரம் ஒருமுறை சுட்ட மீன் சாப்பிட்டால் மூளை திறம்பட செயல்பட உதவும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து.

என்ன தேவை?

வஞ்சிரம் மீன் – அரை கிலோ
வெந்தயம் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 50 கிராம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 4
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
புளி – 40 கிராம் (கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்)
வாழையிலை – தேவையான அளவு
வெண்ணெய் – 100 கிராம்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.

இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள்(தனியாத்தூள்), மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

அதனுடன் புளிக்கரைசலைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இந்தக்கலவையை சுத்தம் செய்த வஞ்சிரம் மீனில் தடவி, நறுக்கிய வாழையிலையில் வைத்து சுற்றி, அதனை வாழைநாரால் கட்டி விடவும்.

பிறகு பார்பிக்யு சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து இருபது நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். அவ்வப்போது வாழை இலையைப் மேல் வெண்ணெய் தடவவும். பார்பிக்யு அடுப்பில் வைத்து நன்கு கிரில் செய்யவும்.

பார்பிக்யு அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். வெந்ததும் வாழை இலையைப் பிரித்து விட்டுப் பரிமாறவும்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்கள்: ஆந்திராவில் பரபரப்பு!