பல ஊட்டச்சத்துகள் கொண்ட கேரட் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் அதிகம் என்றாலும் கேரட்டை ஒதுக்குபவர்கள் நம்மில் பலருண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கேரட் சட்னி செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்தச் சட்னி வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
என்ன தேவை?
கடலைப்பருப்பு – 60 கிராம்
கறுப்பு உளுந்து – 60 கிராம்
காய்ந்த மிளகாய் – 4 – 6
தேங்காய் – அரை மூடி (துருவவும்)
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – கால் இன்ச் துண்டு
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
எண்ணெய் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு
சட்னிக்கு…
கேரட் – 2 (தோல் சீவி நறுக்கவும்)
சின்ன வெங்காயம் – 5 (தோலுரிக்கவும்)
தக்காளி – ஒன்று (நறுக்கவும்)
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிது சிறிதாக எண்ணெய்விட்டு சூடானதும் முதலில் குறிப்பிட்டுள்ள எல்லா தேவையான பொருள்களையும் தனித்தனியாக வதக்கி, பொன்னிறமாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சூடு ஆறியதும், அவற்றைத் தண்ணீர்விடாமல், மிகவும் நைஸாக இல்லாமல்… அதாவது, சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸில் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு மூடி, ஃப்ரீசரில் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம்.
சட்னி செய்ய…
கேரட், சின்ன வெங்காயம், தக்காளியைச் சேர்த்து சிறிதளவு எண்ணெயில் வதக்கி, இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் உடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளையராஜாவை அவமானப்படுத்தி இன்புறுவது ஏன்?: நாராயணன் திருப்பதி கேள்வி!
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது.. டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை!