எனக்கு 45 வயசு தான் ஆகுது. நான் ஒரு நீரிழிவு நோயாளி. நீரிழிவு உள்ளவர்கள் பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார்கள். இது உண்மையா? இதற்கான தீர்வு என்ன?
“எல்லாப் பழங்களிலும் சர்க்கரைச் சத்து இருக்கும். உதாரணத்துக்கு வாழைக்காயில் சர்க்கரை குறைவு. அதுவே வாழைப்பழத்தில் அதிகம். மாங்காயில் சர்க்கரை குறைவு, மாம்பழத்தில் அதிகம். காய், பழமாகும்போது அதன் சர்க்கரைச் சத்து அதிகரிக்கவே செய்யும்.
‘பழங்களை ஜூஸாக்கி, நான் சர்க்கரையே சேர்க்காம தான் குடிக்கிறேன்…’ என்று சிலர் சொல்வதுண்டு. பழங்களை ஜூஸாக்குவதால் அவற்றின் நார்ச்சத்தை இழக்கிறோம். சர்க்கரையே சேர்க்காவிட்டாலும் நார்ச்சத்து நீக்கப்பட்ட அந்த ஜூஸ் வெறும் சர்க்கரைத் தண்ணீருக்கு சமமானதுதான். எனவே எந்தப் பழத்தையும் ஜூஸாக குடிக்கவே கூடாது.
சர்க்கரைச் சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், செங்காயாக உள்ள பப்பாளி, பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்ற அளவில் (பப்பாளி என்றால் இரண்டு துண்டுகள்) எடுத்துக்கொள்ளலாம்.
ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த அட்வைஸ் பொருந்தும். அப்படி இல்லாதவர்கள் பழங்களைத் தவிர்ப்பதுதான் சிறந்தது. ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும் முக்கனிகளான மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் சர்க்கரை அளவு மிக மிக அதிகம்.
‘அப்படியானால் மாம்பழ சீசனில்கூட நாங்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாதா….’ என்றால் வழக்கமாக நீங்கள் சாப்பிடும் நான்கு இட்லியில் இரண்டைக் குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக இரண்டு துண்டு மாம்பழம் சாப்பிடலாம். அந்த அளவு தாண்டாமல் பார்த்துக்கொள்ளும்வரை பிரச்னை இல்லை” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.