கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அமைச்சரின் அப்டேட்!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, ‘கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக திட்டமிடாததால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் வெளியூர் பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பேருந்து நிலையமும் உள்ளது. இந்தப் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேட்டில் இருந்து செல்லும் 60 சதவிகிதப் பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய பேருந்து முனையம் ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் பேருந்து நிலையம் தாமதம் ஆகி வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று (ஜூலை 27) அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கேள்விக்கு அவர், “கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தைப் பொறுத்தளவில் உள்கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன.
இந்தப் பேருந்து முனையம் பயன்பாட்டுக்கு வந்தபின் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பருவமழை காலங்களில் தண்ணீர் வடியும் வகையிலான மழைநீர் வடிகால்கள்,
அதிக அளவு கூட்டம் சேருகின்ற நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதற்கும் காவல் துறை அலுவலகங்கள், மாற்றுப் பாதைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் – நல்லம்பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும்,
சாலை அமைக்கும் பணிகள், வனத்துறையிடம் அனுமதி பெறுதல் போன்ற பணிகளை அமைத்திட கடந்த ஆட்சி காலத்தில் முறையாக திட்டமிடாததால் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு எந்த வகையிலும் அசெளகரிகங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு அனைத்துப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
விரைவில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலைய பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் சி.எம்.டி.ஏ. கூட்டரங்கில் நடந்தது.
அதில் கலந்துகொண்ட அதிகாரிகளிடம், ‘கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எப்போது திறக்கப்படும்’ என்று கேட்டபோது,
“இணைப்பு சாலைகள், போலீஸ் நிலையம், மழைநீர் வடிகால் பணிகள், பொதுமக்களுக்கான மருத்துவ சேவை கூடம் ஆகிய பணிகள் முழுமையாக முடிந்த பிறகு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய பஸ் நிலையம் திறக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர்.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை பிரட்டல் (ஆடி ஸ்பெஷல்)
அண்ணாமலை பாதயாத்திரை: அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு!