பூந்தமல்லியில் இளம்பெண் ஒருவர் 50,000 ரூபாய் பணத்திற்காக பெற்றோரிடமே கடத்தல் நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வியாசர்பாடியை சேர்ந்தவர் ராணி(41), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று இரவு இவரது 22 வயது மகள் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை மர்ம நபர்கள் கடத்தி வந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
ரூ.50 ஆயிரம் பணத்தை நேரடியாக கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே தன்னை விடுவிப்பதாகவும் தனது செல்போனை பிடுங்கி வைத்து கொண்டதாகவும் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி பூந்தமல்லி சென்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து ராணியின் செல்போன் அழைப்பிற்கு வந்த நம்பரை வைத்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக அந்த நபர்கள் கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மலையம்பாக்கம் அருகே இருந்த ராணியின் மகளை மீட்டு விசாரித்த போது, கோயம்பேட்டில் ஆட்டோவில் தன்னை ஒரு இளைஞரும், இரண்டு பெண்களும் சேர்ந்து கடத்தி வந்ததாகக் கூறியுள்ளார். பின்னர் பணம் கேட்டு மிரட்டி விட்டு தன்னை இங்கு இறக்கி விட்டு சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னர் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணும், அவருடன் இரண்டு தோழிகள் மற்றும் ஒரு ஆண் நபர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி டீ கடையில் அமர்ந்து ஜாலியாக டீ குடித்து விட்டு சென்றதும் தெரிய வந்தது.
தோழியின் செல்போனை வாங்கிவிட்டு தனியாக சென்று பேசுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில் தனது தாயிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்று நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரது தாயுடன் அந்த பெண்ணை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
கலை.ரா
குழந்தையை பார்க்காவிட்டாலும் ஜீவனாம்சம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!