கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
”கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும். முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என கரூர் மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் திருவிகா என்பவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த முறை இவ்வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை, “டிசம்பர் 19ஆம் தேதி, கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். அதை வீடியோ பதிவு செய்யவும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது.
தேர்தல் நடந்தது குறித்து வருகிற 22ஆம் தேதி (இன்று) இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் பாதுகாப்பு கோரி போலீசாரை அணுகலாம்” எனவும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, ”துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும், மனுதாரருமான திருவிகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மனுதாரரை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்றுவிட்டனர். எனவே துணை தலைவர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், ”இதுதொடர்பான வழக்கு வருகிற டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இதுகுறித்து விசாரிக்கலாம்” என தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், திமுகவிற்கு 7, அதிமுகவிற்கு 4 வாக்குகள் பதிவாகி உள்ளது. எனவே கடத்தப்பட்டவர் வாக்களித்திருந்தாலும் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. இதனால் தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்கக் கூடாது” என வாதிட்டார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் முடிவுகளை அறிவித்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டனர். மேலும், அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கை திண்டுக்கல் ஏ.எஸ்.பி. விசாரிக்கவும் உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
ஜெ.பிரகாஷ்
இந்திய அணியின் மிரட்டல் பந்துவீச்சு: சுருண்ட வங்கதேசம்
அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!